நீரவ் மோதி, விஜய் மல்லையாவுக்கு சாதகமாக விதிகளை மாற்றியுள்ளதா ஆர்பிஐ?
வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள், தங்களின் கடன் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வழிவகை செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக்கான நடவடிக்கை” (Framework for Compromise settlements and Technical Write -offs) என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடன் நிலுவை தொகை திரும்ப பெறுவது தொடர்பாக, சமரச தீர்வையும் வங்கிகள் காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆர்பிஐயின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வங்கி கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் அல்லது மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், வங்கி உடன் சமரச தீர்வு ஏற்படுத்திக் கொண்ட தேதியில் இருந்து 12 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புதிதாக கடன் பெறலாம்.
